Wednesday, 26 March 2014

பூக்கள் நாளையும் பூக்கும் - ஒரு பார்வை

பூக்கள் நாளையும் பூக்கும் - ஒரு பார்வை

நண்பர் டாக்டர். இரா. ஆனந்தகுமார், IAS எழுதியுள்ள 'பூக்கள் நாளையும் பூக்கும்' ஒரு கவிதை நூல். பாடுபொருள்: காதல். வழக்கம் போல மிக அழகானதொரு அணிந்துரையை நண்பர் திரு..உதயசந்திரன், IAS எழுதியுள்ளார்; 'காதலை வார்த்தைக் குடுவையில் பிடித்து பாதுகாத்திடச் செய்யும் மற்றுமோர் முயற்சியே இந்நூல்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கவிஞர் ஈரோடு தமிழன்பனும் டாக்டர் சங்கரசரவணனும் மேலும் இரு அணிந்துரைகளை வழங்கியுள்ளனர்.

ஆனந்தகுமார் உரைநடையையே கவித்துவமாக எழுதக்கூடிய ஆற்றல் உள்ளவர். கவிதைகள் அனைத்தும் நண்பர் தன்னுடைய கல்லூரிக் காலங்களில் எழுதியதாகத் தெரிகிறது. குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே இவை வெளிவந்திருக்க வேண்டியவை. ஆகவே தற்போதைய பின்நவீனத்துவ உரைகல்லைக் கொண்டு இவற்றை உரசிப்பார்ப்பது சரியல்ல. ஆனாலும், பல கவிதைகளில் காதலுக்கும் அறிவியலுக்குமான ஒட்டுதல் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

பல கவிதைகளில் வானம்பாடிகளின் தாக்கத்தைக் காண்கிறேன். நிறைய படிமங்களும் குறியீடுகளும் கவிதைகளில் பயின்று வருகின்றன.

'
நீண்ட காலமாக என்னால் எதையும் எழுதமுடியாமல் போய்விட்டது; கட்டுரையோ கவிதையோ எழுதவராது என்று நினைத்துக் கொள்ளுமளவு பழுது ஏற்பட்டுப்போய்விட்டது!'’ என்று பின்னுரையில் நூலாசிரியர் கூறுவது அரசு நிர்வாகத்தில் அவருக்குள்ள வேலைப்பளுவின் அடர்த்தியைத் தெளிவாகக் காட்டுவதாகத்தான் எடுத்துகொள்ள வேண்டுமேயொழிய அப்படியே உண்மை என நினைக்கலாகாது

புத்தகத்தில் எல்லாக் கவிதைகளும் மிகச் சிறியவை. கடுகு சிறுத்தாலும் காரம் குறையுமா என்ன?

புத்தகத்தில் எனக்குப் பிடித்த கவிதைகளில் சில:

ஒளி ஆண்டு
"
உன்னோடு
பேச நினைத்து
விட்டுப்போன
வாக்கியங்களின்
நீளம்......"
-
இக்கவிதை 'ஒளியாண்டுக்குக் கொடுக்கப்பட்டுள்ள நவீன வரையறை.

யோசனை
"என்னைத்
தோற்கடித்துவிட்டதாய்த்
துள்ளிக் குதிக்கிறாய்!
அழகாய்ச் சிரிக்கிறாய்
இன்னும்
எப்படி எப்படியெல்லாம்
தோற்பது?"
- இக்கவிதை, தோற்பதன் மூலம் எப்படி ஆனந்தமடையலாம் என்று சொல்லித்தருகிறது! கிட்டத்தட்ட இதே கருத்து ஆசிரியரின் பின்வரும் கவிதையிலும் உள்ளது:

தோற்றம்
"
இன்றைக்கு
மட்டுமாவது
நான் ஜெயிக்கிறேனே?
நாள்தோறுக்குமான
நம் பந்தயங்களில்
உன் கேள்வி
அட அசடே!
உனைக் கண்டதும்
பதங்கமாகும்
கற்பூரம் நான்!
நீராவி வேண்டுமென
அடம்பிடிக்கும்
பனிக்கட்டி நீ
நீ தான்
என் ஆவி!"

நூலாசிரியருக்கு ஊதா மிகவும் பிடித்த நிறம் என்பது 'வேதியியல்' கவிதையின் உட்கிடை.

முறைப்பு
"
செல்லக் கோபங்கள்
செல்லும் பாதையெங்கும்
நெருஞ்சி முற்களைப்
புதைக்கின்றன."
- என்ற கவிதை நம் அன்புக்குள்ளானோர் கோபித்துக் கொண்டு பேசாமல் போய்விட்டால் உண்டாகும் பெருவலியைத் தெரிவிக்கிறது.


நேரம்
"உன்னாலேயே
உன்னைப் புரிந்து கொள்ள இயலாதபோது
என்னை உனக்கு
எப்போது புரிய வைப்பது?"
-
என்ற கவிதை 'நான் யார்?' என்ற ஆன்மிக வெளிக்கு நம்மை இட்டுச் செல்லும்.

ஜெயிலர்
"என்னை
உன்னைக் கொண்டு
காவல் காக்கும்
சிறைக்குள்ளடைக்க
உத்தரவிட்டதும்
நானே."
- இந்தப்புத்தகத்திலுள்ள அனைத்துக் கவிதைகளிலும் எனக்கு மிகவும் பிடித்த கவிதை இது தான். காதல் புலனடக்கத்திற்கு உதவும் என்று நான் அடிக்கடி இளைஞர்களிடம் சொல்லி வருவதை இக்கவிதையிலும் உணர்ந்தபோது மகிழ்ச்சி.

கூடவே இருக்கிறது
"
உன்னைக்
காதலிப்பதற்கு
காத்திருப்பைக்
காதலித்திருக்கலாம்
எப்போதும்...."
- இக்கவிதையை, கவிஞர் ஈரோடு தமிழன்பன் தன் அணிந்துரையில் கீழ்க்காணும் இக்பாலின் கவிதையோடு ஒப்பிட்டிருக்கிறார்:
"இறைவா, நான்
உன்னைத் தேடிக்கொண்டே
இருப்பேனாக......
நீ எனக்குக் கிடைக்காமலேயே
இருப்பாயாக."

நான் இக்கவிதையை, கவிஞர் அப்துல் ரகுமானின் பின்வரும் கவிதையோடு ஒப்பிடுவேன்:
"
காத்திருப்பதில்
கடவுளே கிடைத்து விடுகிறான்
நீயா கிடைக்க மாட்டாய்?
காத்திருத்தலின் சுகமான அவஸ்தையைக் கவிஞர்கள் யுகம்யுகமாகச்
சலிக்காமல் பாடிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.

வேறு உபயோகப்படுமா?
"
பிடிவாதமாக நாம்
அனுப்பாதிருக்கும்
குறுந்தகவல்கள்
எந்த வகையிலாவது?"
ஒவ்வொருவரும் அவரவருடைய அனுபவத்துடன் இக்கவிதையை ஒப்பிட்டு இன்பமடையலாம்.

குழந்தைகள்
"
உன்னோடு பேசாத
வார்த்தைகள்
பிறக்காத குழந்தைகள்!
அதைக் கவிதையாய்
எழுதினால் சிசேரியன் சிரமம்!
மனதிலே தாங்கினால்
நிரந்தர ஈருயிர்!"
-
இக்கவிதையில் பேசாத வார்த்தைகளின் அவஸ்தை தெரிகிறது.

வேறு பெயர்
"
உன் இரு
கடிதங்களுக்கிடையேயான
பரபரப்பை
உலகம்
சுறுசுறுப்பு
என்கிறது!"
மிகப்பெரும் எழுத்தாளர் ஜெயமோகன் அருண்மொழிக்கு எழுதிய சுறுசுறுப்பு இன்னும் கூட எப்படி அப்படியே இருக்கிறது என்பதன் சூட்சமம் இது.

தியாகம்
"
உனக்காக
உன்னையே
விட்டுத்தரச்
சொல்கிறாய்"!

வேள்வி
"
கேள்வி தீருமென
காத்திருந்தால்....
வேள்வி
போலல்லவா
இருக்கிறது?"
-
இவ்விரு கவிதைகளும் நூலாசிரியர் ஒரு 'தலைப்புக் கவிஞர்' என்பதைக் கூறுவன.

உள்ளங்கைக்குள்
"உலகம்
உள்ளங்கைக்குள்
ஒப்புக்கொள்கிறேன்.
உன் உள்ளம் மற்றும்
கைக்குள்
அடங்கிப் போனது
என் உலகம்
மத்த காரெக்டர்கள்
மங்கலாகத் தெரிகின்றன
வாழ்க்கை அதுவாய்
வழுக்கி ஓடுகிறது - எல்லாமே
மிதப்பாய்த்
தெரிகிறது
குறுந்தகவல் பூக்கும்
உன் விரல்கள் உள்ளவரை
உலகம்..."
- SMS
களின் ஆதிக்க வரையறையை இக்கவிதை நிலைநிறுத்துகிறது.

தகவல் நரம்பு
"
எலக்ட்ரிகல் கண்டக்டிவிடி
சொல்லியனுப்பாத
செய்திகள்
மலரக் காத்திருக்கிற
முல்லைகள்
பல வார்த்தைகளுக்கு
கிடைப்பதில்லை
அந்த
பாக்கியம்!
உன் நியூரான்களில்
சோடியம் பொட்டாஷியம்
அயனிகளை
தூவானமாகத் தூவி விடுகிற
வேலையைச் செய்யப் போகிற
வார்த்தை வேல்களாய் மாற
என் பென்சில்
முனைகள்
தயாராகிக் கொண்டு
உள்ளன!"
- உண்மை. வார்த்தைகள் நம் நரம்புகளையும் முடுக்கக் கூடியவை.

படித்த காலம்
"
நான் பருவத்தே பயிர் செய்யா விவசாயி
என் கர்வத்தை நீ கொய்தாய் படுபாவி
என் கற்புமிகு கவிதைகளுக்கு
காதலிக்கக் கற்றுத் தந்தாய்
என் விரைப்புமிகு தன்முனைப்பை
மலிவு விலைக்கு விற்றுத் தந்தாய்
உன் கல்யாணம் என்கின்ற கதவுதிறந்து
வந்தது என் ஞானம்
என் வருத்தத்திற்கு ஆனது எல்லை
அந்த வானம்
நானொரு கிரீன் ஹவுஸ் நாற்று!
நீயோ வெளிக்காற்று!"
- 'பருவத்தே பயிர்செய்யாமல்' விட்டதன் கஷ்ட நஷ்டங்கள் புரிந்தவர்கள் இக்கவிதையை அதிகம் ரசிக்கக் கூடும்; எல்லோரும் சிலவற்றை இழந்து சிலவற்றைப் பெற்றிருப்போம். முன்னேறத் துடிப்பவர்களுக்கு வாழ்க்கையில் நிகழ்ந்த, தவிர்க்கமுடியா நியதி இது!

புயல்
"
சிறப்பு வானிலை
அறிக்கை
வானம் காதல் மூட்டத்துடன்
காணப்படுகிறது
கனவுடன்கூடிய
பலத்த மழை
பொழியக் கூடும்
மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே
செல்லவேண்டாம் என
எச்சரிக்கப்படுகிறார்கள்"
மீராவினுடையதோ - மு.மேத்தாவினுடையதோ - கிட்டத்தட்ட இதே போன்றதொரு கவிதையை 80களின் தொடக்கத்தில் படித்ததாக எனக்கு ஞாபகம். கவிஞர்களின் சிந்தனை ஒத்திசைவாகத்தான் இருக்கிறது.

"
வளர்வார் கவின் ஆனந்தகுமார்
என்ற நம்பிக்கையை என்னுள்
வளர்த்துள்ளது இந்நூல்" என்று தமிழன்பன் கூறுவது முற்றிலும் உண்மை.

நூலில் நிறைய அச்சுப்பிழைகள் உள்ளன:


வரிசை எண்
பக்கம்
வரி
பிழை
திருத்தம்
1.
5
6
கடலில்
கூடலில்
2.
9
7
தேடி பெறுவதன்று...
தேடிப் பெறுவதன்று...
3.
10
21
தேனாடும்
தேனோடும்
4.
10
25
என்றுள்
என்னுள்
5.
10
26
வளர்ந்துள்ளது
வளர்த்துள்ளது
6.
11
3
காலங்காலமாக பேசப்படும்
காலங்காலமாகப் பேசப்படும்
7.
11
8
பந்தம் பிடிவாதம்,
பந்தம், பிடிவாதம்
8.
12
6
நின்கின்ற
நிற்கின்ற
9.
12
15
உன்னை சூடிக்கொண்டதா?
உன்னைச் சூடிக்கொண்டதா?
10.
13
3
கனங்களில்
கணங்களில்
11.
13
16
எனக்குக் சந்தோசம்
எனக்குச் சந்தோசம்
12.
19
9
ஒளியாண்டை பயன்படுத்துகின்றனர்
ஒளியாண்டைப் பயன்படுத்துகின்றனர்
13.
30
17
படித்ததால்
பிடித்ததால்
14.
31
9
ஆக்குவதாக கண்டுபிடித்துள்ளனர்
ஆக்குவதாகக் கண்டுபிடித்துள்ளனர்
15.
33
10
மாற தலைப்படுதலாம்
மாறத் தலைப்படுதலாம்
16.
34
4
எல்லா குடும்பங்களும்
எல்லாக் குடும்பங்களும்
17.
37
6
பள்ளிக்கூட தம்பி
பள்ளிக்கூடத் தம்பி
18.
37
12
அலைக்கின்றன
அலைகின்றன
19.
38
15
பனிரெண்டாம்
பன்னிரண்டாம்
20.
41
4
கிடைக்கக் கூடாது?
கிடைக்கக்கூடாது -
21.
60
5
கவிதைகளாகி கசிந்திருக்கின்றன
கவிதைகளாகிக் கசிந்திருக்கின்றன
22.
60
7
பாட்டுப் பாடுகின்றன
பாட்டு பாடுகின்றன
23.
75
5
வட்டியாய் கிடைக்கும்
வட்டியாய்க் கிடைக்கும்.
24.
84
5
சேர்த்துபோல்
சேர்ந்ததுபோல்
25.
91
7
வார்த்தைகளுக்கு கிடைப்பதில்லை
வார்த்தைகளுக்குக் கிடைப்பதில்லை
26.
91
13
அயனிகளை தூவானமாக
அயனிகளைத் தூவானமாக
27.
95
4
கவிதைகளுக்கு காதலிக்க
கவிதைகளுக்குக் காதலிக்க
28.
104
15
நேரமின்றி போனதால்
நேரமின்றிப் போனதால்
29.
104
21
நயாகராவாக கவிதை
நயாகராவாகக் கவிதை
30.
105
3
வரம்புகளை கடந்து
வரம்புகளைக் கடந்து
31.
105
6
ஊர்வலமாய் போய்
ஊர்வலமாய்ப் போய்
32.
105
8
எதிவும்
எதுவும்
33.
105
10
புத்துணர்வுக்கு பஞ்ச
புத்துணர்வுக்குப் பஞ்ச
34.
105
21
காலத்தை கடந்து
காலத்தைக் கடந்து
35.
105
26
உணர்வுகளை சிதைத்து
உணர்வுகளைச் சிதைத்து
36.
107
11
தொட்டு போகின்றார்கள்
தொட்டுப் போகின்றார்கள்
37.
107
13
என தெரியவில்லை
எனத் தெரியவில்லை
38.
108
2
வாறக்குறையாத
வாரக் குறையாத
39.
108
3
வகையாக கவிதை
வகையாகக் கவிதை
40.
108
4
அறுவடையாகி குவிகின்றது
அறுவடையாகிக் குவிகின்றது
41.
108
14
ஒன்றாய் கூட
ஒன்றாய்க் கூட
42.
108
18
தனித்னியாய்
தனித்தனியாய்
43.
108
20
எதற்காக சந்தித்து
எதற்காகச் சந்தித்து
44.
109
22
பாராட்டுப் பெறுகின்றதா
பாராட்டு பெறுகின்றதா
45.
110
21
மலர் மாறி
மலர் மாரி
46.
110
24
வரவழைக்க கூடும்
வரவழைக்கக் கூடும்
47.
110
26
உபயோகப்படுத்க்கூடும்
உபயோகப்படுத்தப்படக்கூடும்
48.
111
5
உன்னை சேர்க்க
உன்னைச் சேர்க்க
49.
111
15
நேசத்தை சேகரித்து
நேசத்தைச் சேகரித்து
50.
111
20
எடுத்ததெற்கல்லாம்
எடுத்ததற்கெல்லாம்
51.
111
25
போட்டிபோடுகின்றது உன்விழிகள்
போட்டிபோடுகின்றன உன் விழிகள்
52.
112
21
புது புது அர்த்தங்களில்
புதுப்புது அர்த்தங்களில்

இது ஒரு தமிழ்க்கவிதை நூல் என்பதால் பிழைகளைச் சுட்டவேண்டியிருக்கிறது. மற்றவகையான தமிழில் எழுதும் புத்தகங்களில் இப்போது யாரும் பிழைகளை ஒரு பொருட்டாகப் பார்ப்பதே இல்லை. என்னிடம் சிவில் சர்விஸ் தேர்வுக்காகத் 'தமிழ் இலக்கியம்' படித்த இந்நூலுக்கு மூன்றாவது அணிந்துரை எழுதிய சங்கரசரவணா! உன் கண்களுக்குமா இப்பிழைகள் தட்டுப்படவில்லை? சரி, வாழ்நாள் முழுக்க சிவில் சர்விஸ் தேர்வெழுத உன்னைத்தேடி வருபவர்களுக்குத் 'தமிழ் இலக்கியம்' சொல்லித்தர உன்னைச் சபிக்கிறேன்!