Thursday, 13 March 2014

அகப் பொறியியல் (Inner Engineering)

அகப் பொறியியல் (Inner Engineering) என்ற தலைப்பில் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நான் ஆற்றிய உரை.

 அகப் பொறியியல் (Inner Engineering)

                  அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.

     ஆரவாரமில்லாமல் பல நற்செயல்களைச் செய்துகொண்டிருக்கிற யுவசக்தி அமைப்பினருக்கும், விருது பெற்று உரையாற்றி அமர்ந்திருக்கிற சான்றோருக்கும், நல்ல பாரம்பரியங்களை உருவாக்கும் அண்ணா பல்கலைக்கழக முதல்வருக்கும், அறிவில் சிறந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்.

            அகப்பொறியியல் - மிக உன்னதமான தலைப்பு இது.

            அகப்பொறியியல் - சங்க இலக்கியத்தில் அகம், புறம் என்ற பாகுபாடு உண்டு. அந்தப் பாகுபாட்டின்படி, அகம் என்றால் காதல். ஆக, நாம் காதலைப் பற்றிப் பேசப்போகிறோமா? ஆம், நாம் அதைப்பற்றியும் பேசுவோம். ஆனால், அது மட்டுமே அகப்பொறியியல் அல்ல. அதைப்பற்றி பின்னர் பேசுவோம்.

     ஞானிகள் கூறுவது போல குண்டலினி சக்தியை மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞா என்கிற இந்த சூட்சும உடலின் 6 சக்கரங்களின் வழியாக ஸஹஸ்ரஹாரத்திற்கு ஏற்றி, பிரபஞ்ச சக்தியோடு ஒன்று சேர்வது எப்படி என அறிந்து கொள்வது அகப்பொறியியலா? ஆம். அதுவும் அகப்பொறியியல் தான். ஆனால், அது நம்மில் எத்தனை பேருக்குப் புரியும்?

     பதஞ்சலி கூறுவது போல இயமா, நியமா, ஆசனா, பிரணயாமா, பிரதிஹாரா, தாரணா, தியானா, சமாதி என்ற அக்ஷ்டாங்க யோகம் தான் அகப்பொறியியலா? ஆம், அதுவும் அகப்பொறியியல் தான். ஆனால், அதனை நம்மில் எத்தனை பேரால் உள்வாங்கிக் கொள்ளமுடியும்?

     அகப்பொறியியலை நாம் எல்லோருக்கும் புரிகிற அறிவியல் மொழியில் பேசுவோம். இந்த Chakra Technology மற்றும் அக்ஷ்டாங்க யோகத்துடனும் தொடர்பு தன்னால் விளங்கும்.

     ஏன் அகப்பொறியியல்? AC, Fridge, Washing Machine, Gas stove, Flight, Computer, Internet, etc., etc. - உலகம் நம் விரல் நுனியில். நம் முன்னோர்கள் யாரும் அனுபவித்திராத அளவுக்கு நம் சுகவாழ்க்கைக்கு பல வசதிகளை - ஏற்பாடுகளைச் செய்துவிட்டோம். ஆனால், இவ்வளவு இருந்தும், உள்ளார்ந்த மன அமைதி கிடைத்ததா? எளிய வாழ்க்கை வாழ்ந்த நம் முன்னோருக்குக் கிடைத்த ஆனந்தம் கிடைத்ததா?

     மிகப்பெரிய வீடு, ஆனால் மிகச்சிறிய குடும்பம் - ஏன்? - Nuclear family - அதிலும் divorce, சண்டைச் சச்சரவுகள்.

     நன்கு முன்னேற்றமடைந்த மருத்துவம் - ஆனால் மிகக்குறைந்த உடல் நலம்! ஏன்? Nuclear Medicine, gene therapy எல்லாம் வந்துவிட்டன. India is diabetes capital! West has more cancer occurrence!

     நிலவைத் தொட்டுத் தெரிந்துகொண்டோம். ஆனால் நமக்குப் பக்கத்திலிருப்பவரைத் தெரியாது. ஏன்?


     அளவுக்கதிகமான வருமானம் வருகிறது. ஆனால் மனஅமைதி (peace of mind) இல்லை. ஏன்? -  “Pay your tax and have peace of mindஎன்று Advertise செய்ய வேண்டியிருக்கிறது!

     IQ மிக அதிகம். ஆனால், மற்றவர்கள் உணர்வுகளை அணுசரணையுடன் அணுகத் தெரிவதில்லை. ஏன்?

     Face bookல் நிறைய நண்பர்கள் - ஆனால் நிஜ நண்பர்கள் இல்லை. ஏன்?

     நிறைய மனிதர்கள் - ஆனால் குறைந்த மனிதம். ஏன்?

     விலை மிகுந்த கடிகாரம் நம்மிடம். ஆனால் நமக்கு நேரமில்லை. ஏன்?

     அபரிமிதமான வளர்ச்சி - ஆனால், சுற்றுச்சூழல் சீர்கேடு - ஏன்?

     Nuclear Physicsல் கடவுள் துகளைக் கண்டுகொண்டோம். ஆனால் அணுகுண்டால் நாம் அழியும் அபாயம். ஏன்?

     நமது மகிழ்ச்சி - ஆனந்தம், வெளியில் உள்ளவரையோ, வெளியில் உள்ள பொருளையோ தான் சார்ந்திருக்கிறது என்று நாம் எண்ணி வந்ததினால், புறப்பொறியியலில் மட்டும் அதிக கவனம் செலுத்தினோம். அகப்பொறியியலை மறந்து விட்டோம்.

     புறப்பொறியியலில் தவறொன்றுமில்லை. ஆனால், அது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு - அதற்கும் மேலாக அகப்பொறியியல் முக்கியம். நமக்கு இரண்டும் தேவை. இதுதான் சுவாமி விவேகானந்தர் கூறுகிற மேற்கின் Materialismமும் கிழக்கின் மெய்ஞானமும் சந்திக்கிற புள்ளி.

     வெளியில் உள்ளவர்களையோ, வெளியில் உள்ள பொருள்களையோ நம்மால் ஓரளவுக்கு மேல் மாற்ற முடியாது. ஆனால் நம்மை நாம் முழுமையாக மாற்றிக்கொள்ளும் அதிகாரம் - Zone of discretion - நமக்கு உள்ளது. உண்மையில் practicalஆக நாம் Inner Engineeringல் என்ன செய்யமுடியும் என்பதைப் பற்றி பேசுவோம்.

     நமது Personality - ஆளுமை, மூன்று குணங்களால் ஆனது - ராஐஸம், தாமஸம், சத்துவம். ராஐஸம் என்பது Kinetics / Dynamics. தாமஸம் என்பது Intertia. புறப்பொறியியலில் நாம் சாதித்தவை எல்லாம் இந்த ராஜஸ குணத்தால் சாத்தியப்பட்டவை. சாந்தமான சத்துவம், ராஜஸத்தையும் தாமஸத்தையும் நடுநிலையில் வைத்திருக்கும் அகப்பொறியியல்.

     கருவிகளைப் பற்றி அறிந்து கொள்வதும், அந்தக் கருவிகளை இயக்குவதில் நிபுணத்துவம் பெறுவதும் தானே Engineering?

     அகப்பொறியியலில் நமது கருவிகள் எவை? அவற்றை இயக்குவதில் நாம் எப்படி expert ஆவது? இந்த உடலும் மனமும்தான் நமது கருவிகள்.

     முதலில் உடலைப் பற்றி பேசுவோம். உள்ளிருக்கும் பிரம்மமான அகத்தைப் பாதுகாக்க இந்த உடலும் அவசியம். அதனால்தான் பாரதியார் 'உடலினை உறுதி செய்' என்றார். திருமூலரும் 'உடம்பார் அழியின் உயிரார் அழிவார்' என்றார். சுவாமி விவேகானந்தரும் 'முதலில் கால்பந்து விளையாடி உங்கள் உடலினை உறுதி செய்துகொள்ளுங்கள், பின்னர் ஆன்மிகம் பேசுவோம்' என்றார். புரதச் சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும். வெறும் கார்போஹைட்ரேட் உணவுகளை மட்டும் சாப்பிட்டால் obesityம் Diabetesம் தான் வரும். Omega 3 fatty acids உள்ள வல்லாரை, பாதாம், வால்நட், flax seed எல்லாம் மூளை உணவுகள். அவை மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஆசனமும், மூச்சுப்பயிற்சியும் உடலுக்கு வளம் சேர்க்கும். இதனைத்தான் ஆசனா, பிரணயாமா என்று பதஞ்சலி தன் அக்ஷ்டாங்க யோகசூத்திரத்தில் கூறுகிறார். இந்த ஆசனமும், மூச்சுப் பயிற்சியும் தான் ஹடயோகம் என்று சொல்லப்படுகிறது.

            நம்முடைய பலவீனங்களைப் பலமாக மாற்றுங்கள். எப்படி? ஒரு சிறு கதை சொல்கிறேன். ஒருவர் தன் தோளின் மீது ஒரு கோலில் இரண்டு பக்கமும் கயிறுகட்டி இரண்டு குடங்களில் ஒரு குளத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து ஒரு தொட்டியை நிரப்புகிறார். அதில் ஒரு குடத்தில் லேசான விரிசல் இருப்பதால் தண்ணீர் கீழே கசிந்து, தொட்டிக்கருகில் வரும்போது பாதிகுடமே தண்ணீர் இருக்கும். இதனால், அந்த முழுகுடம், பாதிகுடத்தைப் பார்த்து 'நானே தொட்டியை நிரப்ப அதிகம் உதவுகிறேன். நீ ஒரு waste' என்று கேலி செய்கிறது. பாதிகுடம் தண்ணீர் சுமப்பவரிடம் தன் வருத்தத்தைத் தெரிவிக்கிறது. அதற்கு அவர் சொன்னார் 'நீ வரும் வழியைப் பார்த்தாயா, நல்ல மலர்கள் பூக்கும் நந்தவனமாக உன்பக்கம் இருக்கிறது, முழுகுடத்தின் பக்க வழி ஒரு கட்டாந்தரையாக இருக்கிறது. உன் வழியில் நான் பல விதைகளை நட்டதால், நீ அதற்கு தினமும் நீர் ஊற்றி வந்தாய். நீயா waste?' என்று. நம் பலவீனங்களை பலமாக மாற்றிக்கொள்ளும் வல்லமை நமக்கு இருக்கிறது.


      அடுத்து மனதைப் பற்றி பேசுவோம். மனமது செம்மையானால் வாழ்வது செம்மையாகும். எப்படி செம்மைப்படுத்துவது?

          மனம் ஒரு அதிசயத்தக்க கருவி. இதை வைத்துக் கொண்டு நாம் எதையும் சாதிக்கலாம். ஆனால், அதுவே எல்லா துன்பங்களையும் உற்பத்தி செய்கிற Manufacturing unit-ஆகவும் இருக்கிறது! அதை எப்படிப் பயன்படுத்துவது என்பது நம் கையில் தான் உள்ளது. இந்த மனதை வைத்துக் கொண்டு நாம் வளமான வாழ்க்கை வாழப்போகிறோமா அல்லது துன்பதில் உழல்கிறோமா என்பது நம் விழிப்புணர்வைப் பொறுத்தது. விழிப்புணர்வினால் அதனை நம் நல்வாழ்வுக்குப் பயன்படுத்த முடியும். விழிப்புணர்வில்லையானால், அது துன்பத்தில் உழலச் செய்யும்.

     இந்த உலகம் நாம் நினைக்கிறபடி நிகழவில்லை என்பதோ, மற்றவர்கள் நாம் நினைக்கிறபடி நடக்கவில்லை என்பதோ, சோகமல்ல. நாம் நினைக்கிறபடி, நாம் நிகழவில்லை என்பது தான் மிகப்பெரிய சோகம்.

     நமது உடலும் மனமும் நமது கருவிகள். நம் கட்டளைக்கு அவை பணிய வேண்டும். Sweet வேண்டாம் என்றால் இந்த உடல் கேட்கவேண்டும். காலையில் 5 மணிக்கு எழவேண்டும் என்றால் உடலும் மனமும் கேட்கவேண்டும். மாறாக, அவை சொல்வது போல் நாம் நடந்தால் என்ன ஆகும்? உதாரணம் ஒன்று பார்ப்போம். Car நமது கருவி. நாம் இயக்குவதுபோல் அது இயங்க வேண்டும். மாறாக இயங்கினால் என்ன ஆகும்? அப்படித்தான் நம் மனம் சொல்வது போல் Compulsiveஆக நாம் இயங்கினால், நம் வாழ்க்கையே விபத்தாகிவிடும். நம்முடைய வாழ்க்கை அப்படித்தான விபத்தாகிக் கொண்டிருக்கிறது. இதை விழிப்புணர்வில்லாமல் நாம் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

     நாம் சொல்வது போல் நமது மனம் கேட்க வேண்டும். அதற்கு என்ன செய்ய?

     - விழிப்புணர்வு: நாம் வேறு; இந்த உடலும் மனமும் வேறு என்ற விழிப்புணர்வு. நாம் Inner Higher Self - ஆன்மா; இந்த உடலும் மனமும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற கருவிகள் என்ற விழிப்புணர்வு. ஆனால் இந்த விழிப்புணர்வு நமக்கு அவ்வளவு சுலபமாகக் கைகூடுவதில்லை. இந்த விழிப்புணர்விலிருந்து நாம் அவ்வப்போது நழுவிவிடுகிறோம். ஏனென்றால் 'இந்த உடலே நாம்' என்று காலம்காலமாக நாம் எண்ணிவந்திருக்கிறோம். இது நம் பழக்க தோஷம். ரமணர் ஒரு Technique சொல்லித் தருகிறார்: 'நான் யார்?' என்று தொடர்ந்து கேள்வி கேட்டு விசாரம் செய்தால் போதும். இப்படி அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நீங்கள் விடைகண்டுபிடித்து, விழிப்புணர்வில் தொடர்ந்து நிலைத்தால், அதைத்தான் 'ஞான மார்க்கம்' என்கிறார்கள். இந்த விசாரம் பலருக்கு அவ்வளவு சுலபமாகக் கைகூடுவதில்லை!

-          நல்லனவற்றைப் பார்த்தல்: Visual Food
'TV+Cinema+cell phone= Disaster (சீரழிவு)' என்னாரு சமன்பாடு இருக்கிறது. எதைப் பார்த்தாலும் நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்கிற அன்னப்பறவையாக நாம் இருக்க வேண்டும். Cell phoneஐ பல நல்ல வழிகளில் பயன்படுத்தலாம்.

     - நல்லனவற்றைக் கேட்டல்: இதனைச் 'சத்சங்கம்' என்பார்கள். உங்கள் Peer group - circuit - network - connectionஐ - நல்லமுறையில் அமைத்துக்கொள்ளுங்கள். இந்த 'சத்சங்கம்' தான் ஒரு வகையில் 'பக்தி மார்க்கம்'

     - நல்லனவற்றைப் படித்தல்: திருக்குறள், ராமகிருஷ்ண பரமஹம்சர் கதைகள், சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள், காந்தியடிகளின் சத்திய சோதனை, பாரதியார் கவிதைகள், யுவசக்தி கதைகள் ஆகியவற்றைப் படிப்பது மிகுந்த பலனளிக்கும். சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளைப் பாருங்கள்: "நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்". "நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனமாகவே ஆகி விடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்". "நீ உன்னைப் பலவீனன் என்று ஒருபோதும் சொல்லாதே. எழுந்து நில். தைரியமாக இரு. வலிமையாக இரு. பொறுப்பு முழுவதையும் உன் தோள் மீதே சுமந்துகொள்". "என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும் போது, காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ". "பயங்கரத்தை எதிர்த்து நில். ஓர் அடியும் பின்வாங்கக் கூடாது". "நோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி. அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள். கையில் பணமில்லையே உடலில் வலுவில்லையே உதவி செய்ய நண்பர்கள் இல்லையே என்றெல்லாம் யோசித்து நேரத்தை வீணாக்காதே. எதற்கும் பயப்படாதே. தயங்காதே. இலக்கை நோக்கி அடியெடுத்து வை. தொடர்ந்து முன்னேறு. சோதனைகள் விலகும். பாதை தெளிவாகும். நோக்கத்தை அடைந்தே தீருவாய். அதை யாராலும் தடுக்க முடியாது". இந்த பொன்மொழிகளின் விரிவாக்கமே மேலைநாட்டு Kopmeyor முதலானவர்களும் நம் நாட்டு Robin Sharma போன்றோரும் எழுதிய Self development books.

     - நல்லனவற்றைச் செய்தல்: சுவாமி விவேகானந்தர் வலியுறுத்துவது இதைத் தான். "மக்களுக்குச் செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு". "பணி செய். அதற்குப் பெயர் தவம். தன்னலமற்று மக்களுக்கு உழைக்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதைத் தாழ்வாக எண்ணாதே. அவ்வாறு உழைக்கும் பணி தெய்வத்திற்குச் செய்யும் திருத்தொண்டைப் போன்றது". "நீ கடவுளைத் தேடி எங்கும் போக வேண்டாம். ஏழைகள், துன்பப்படுவோர் எல்லோருமே கடவுள் தான். அவர்களை ஏன் முதலில் பூஜை செய்யக்கூடாது?" இது தான் சுவாமி விவேகானந்தர் கூறுகிற கர்ம யோகம். Work is worship. Service is Religion.

     இந்த நல்லனவற்றைப் பார்த்தல், நல்லனவற்றைக் கேட்டல், நல்லனவற்றைப் படித்தல், நல்லனவற்றைச் செய்தல் தான் பதஞ்சலி கூறுகிற இயம நியமங்கள்.

     -Eric Berne என்ற உளவியல் அறிஞர் Transactional Analysis என்கிற ஒரு Technique-ஐத் தருகிறார். இதன்படி, நமது ஆளுமை மனது, Parent part, child part, Adult part என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. பெற்றோர் நம்மிடம் நடந்து கொள்ளும் விதம் Parent part மனதில் பதிகிறது. அதற்கு குழந்தையின் எதிர்வினை 'child part' மனதில் பதிகின்றது. தர்க்க ரீதியானதும் அறிவியல் பூர்வமானதும் Adult part மனதில் பதிகின்றன. Parent part, child part பதிவுகள் அழிக்கமுடியாதவை. ஆனால், Adult part சுயமாகச் சிந்தித்து அவற்றின் தாக்கம் வெளிப்படுவதைக் கட்டுப்படுத்த முடியும் - புறந்தள்ள முடியும். பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசுவது, ஆரோக்கியமற்ற போட்டி மனப்பான்மையை உருவாக்கும்; மற்றவர்களை நம்பாத குணத்தை உருவாக்கும். வளர்ந்ததும் அந்தக் குழந்தையால் ஒரு குழுவில் இயங்க முடியாது. தன்னுடைய Notesஐப் பிற மாணவர்களிடம் share பண்ணிக் கொள்ளாது. 'Compete with yourself, not with others' என்ற மனநிலையை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். நல்ல பெற்றோர் அமைந்து விட்டால், அந்தக் குழந்தை நம் புராணங்கள் கூறுவது போல 'கருவிலே திரு'வாகி விடும். நாம் Adult part மனதில் நல்லனவற்றை எழுதிக்கொள்ள முடியும் என்பது தான் இந்த Techniqueன் சிறப்பு.

     - அடுத்து Nishkam Karma என்ற அகப் பொறியியல் Technique குறித்து பார்ப்போம். இது பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்வதாகும் - அதனதன் சுயதர்மாவில் இயங்குவது - சூரியன் எல்லோருக்கும் ஒளி பரப்புவது போல - மரம் வளர்ந்து கனி தருவது போல - Detached involvement உடன் செயல்படுவது - தனக்கென கொடுக்கப்பட்டிருக்கும் வேலையில் முழுமையாக ஈடுபட வைக்கும்; ஆற்றல் முழுவதையும் இப்போது செய்யும் வேலையில் முழுமையாக ஈடுபட வைக்கும். பலனை நினைக்கும் மாத்திரத்தில், இப்போது செய்யும் வேலையில் காட்டும் ஆற்றல் சிதறிப்போகும். A cricketer keeping an eye on scoreboard cannot score well. Nishkam karmaவில் தான் இந்த கணத்தில் வாழமுடியும். அப்போது நாம் செய்யும் வேலையே ஒரு வழிபாடாக மாறும். வாழ்க்கையே வழிபாடாகும். பலன் என்பது எதிர்காலத்தைச் சார்ந்தது. பலனில் அக்கறை காட்டினால், நீங்கள் எதிர்காலத்தில் வாழ்கிறீர்கள்; நிகழ்காலத்தில் இல்லை; அப்போது கவனம் சிதறும். பலனின் மீது பற்று, ஆணவத்தை வளர்க்கும். பலனின் மீது பற்று, வெற்றியை ஈட்டத்துண்டும். பலனின் மீது பற்று, உங்களை எந்த வழியிலேனும் வெற்றியை ஈட்டத்தூண்டும். Nishkam Karma எந்த resultஐயும் ஏற்றுக் கொள்ளும் மனோபாவத்தைக் கொடுக்கும். Means are more important than the ends' என்று காந்தியடிகள் சொல்வது இதைத்தான். Deontological ethics என்று Immanuel Kant சொல்வதும் இதைத்தான்.

     - அடுத்து அகப்பொறியியலின் முக்கியமான Karma theoryஐப் பார்ப்போம். இது தான் Law of conservation of Moral Energy. Every act good or bad has its energy level that is never lost. இது Law of cause & effect என்றும் சொல்லப்படுகிறது. எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்தாக வேண்டும். இந்த விதியிலிருந்து ஒருவரும் தப்ப முடியாது. There is no mutual cancellation. நமது விதியை நாமே எழுதுகிறோம். நல்லது செய்தால் நல்ல விதியை உருவாக்கிக் கொள்கிறோம். தீமை செய்தால் தீவினை நம்மை ஆட்கொள்ளும். 'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று இளங்கோவடிகள் சொல்வது இதைத்தான். 'ஊழிற் பெருவலி யாவுள? என திருவள்ளுவர் கேட்பது இதைத்தான். ஆகவே இப்போதைய கர்மாவில் விழிப்புணர்வுடன் இருத்தல் முக்கியம். இந்த கணம் மட்டுமே இப்போது நம் முன் இருப்பது - அதில் நல்லது செய்வோம்.

     -"Accept + Take Responsibility + Love =Bliss என்ற சமன்பாட்டைப் பார்ப்போம். முதலில் Accept: ஏற்றுக் கொள்ளுங்கள். நமது தவறுகள் குற்றங்கள் ஆகியவற்றை ஒப்புக் கொள்ளுங்கள். அப்போது தான் தவறிலிருந்து முன்னேற முடியும். தவறையே நாம் ஒப்புக் கொள்ளாத போது முன்னேறுவதற்கு வழியே இல்லை. அப்படியே Traffic Rules உட்பட சமூகத்தின் சட்டதிட்டங்கள் - அவை தனிப்பட்ட முறையில் உங்களுக்குச் சாதகமாக இல்லாவிட்டாலும், பொது நன்மை கருதி ஏற்றுக்கொண்டாக வேண்டும். சமூகத்தின் சட்டதிட்டங்கள் அனைத்தும் உங்களாலேயே உருவாக்கப்பட்டவை என்று தர்க்கரீதியாக நினைத்தால், அவற்றின்படி நடப்பது எளிதாகிவிடும். ஏற்றுக்கொள்ளுங்கள்  - பலவீனங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள். எல்லாம் இயற்கையின் படைப்பு.

     - Take Responsibilty. பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். எந்த அளவுக்குப் பொறுப்பேற்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் விரிவடைகிறோம். உங்களுக்கு - உங்கள் வகுப்புக்கு - உங்கள் மாநிலத்திற்கு - உங்கள் நாட்டுக்கு - உலகத்திற்கு என்று நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளும் போது அந்தந்த அளவிற்கு நீங்கள் விரிவடைகிறீர்கள். 'இது எனது பொறுப்பில்லை; அவர்கள் செய்ய வேண்டியது' என்ற எண்ணம் உங்களைக் குறுக்கிவிடும். இந்த பிரபஞ்சத்திற்கே பொறுப்பேற்றால், கடவுளாகி விட முடியும்!

- அன்பு தான் உயிர்மூச்சு: காதலுக்கு வருவோம்.
                        நீங்கள் நினைக்கிற காதல் அல்ல அது. நாம் பொதுவாகச் சொல்லும் காதல் பாலினக்கவர்ச்சி. பாலினக் கவர்ச்சியைக் காதல் என்று சொன்னால், உங்களுக்குக் காதல் என்றால் என்னவென்றே தெரியாது என்று அர்த்தம். காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்று உருகும் திருஞானசம்மந்தரின் காதலா அது? 'தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே' என்ற திருநாவுக்கரசரின் சரணாகதியா அது? 'அன்பெனும் வலைக்கு உட்படும் பரம்பொருளே' என்று அறிவிக்கும் இராமலிங்கரின் கருணையா அது? 'அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே' என்கிற இயேசு நாதரின் கிருபையா அது? 'ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே' என்றழைக்கும் பாரதியின் காதலா அது? எந்த நிலையிலும் அன்பாக இருக்கிற (Being) தாயுள்ளம் தானே காதல்? எந்த நிலையிலும், irrespective of gender, தாயுள்ளத்தோடு உங்களால் இருக்க முடியும் என்றால், அது காதல்.

                 நமக்கு பருவத்தில் வருவது பாலினக் கவர்ச்சி. அது Normal Physiology தான். அந்த உணர்வில் தவறொன்றும் இல்லை. அது ஆண்களுக்கு Testosterone, பெண்களுக்கு Estrogen என்ற Hormoneகளால் விளையும் Chemistry - Chemical Engineering. ஆனால், அந்த பாலினக் கவர்ச்சி காதலல்ல. இந்த பாலினக் கவர்ச்சியில்தான் இந்த உலகத்தைக் காலங்காலமாக உயிர்ப்போடு இருக்க வைக்கிற Procreative Energy உள்ளது. இந்த Procreative Energy, சந்ததியை உருவாக்கப் பயன்படுவது. சந்ததி விருத்திக்காக இயற்கையால் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற Procreative energyயால் இயல்பாக எழும் பாலினக் கவர்ச்சியை தெய்வீகக் காதல் என்று மயங்கக் கூடாது. அப்படியென்றால், மாணவப் பருவத்தில் Procreative Energyஐ என்ன செய்வது? அதை மடைமாற்ற வேண்டும். ஆற்றலை அழிக்க முடியாது. ஆனால் ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும். இது தான் 'Law of conservation of Energy'. Procrative Energy அளப்பரிய ஆற்றல் கொண்டது. TV, Cinema, cell phone, internet என்று இருந்தால், இந்த procreative energy, பாலினக் கவர்ச்சியாகவே தேங்கிவிடும். படிப்பு, ஆராய்ச்சி, Extracurricular activities, service என்று அந்த Procreative energyஐ மடைமாற்றினால், அளப்பரிய சாதனைகளைப் புரியமுடியும்.

                 பாலினக் கவர்ச்சி கை கூடாத போது தன்னையே சிலர் மாய்த்துக் கொள்வதைப் பார்க்கிறோம். தன்னையே காதலிக்கமுடியாத ஒருவனால், எப்படி வேறொருவரைக் காதலிக்க முடியும்?   தன்மீதே வன்முறையாக நடந்து கொள்ளும் ஒருவனால்நிஜக்காதல் எவ்வாறு சாத்தியம்?         பாலினக் கவர்ச்சி சாத்தியப்படாத போது, acid ஊற்றி முகத்தைச் சிதைக்கும் ஒருவன் செய்தது எப்படிக் காதலாக இருக்க முடியும்?

                 ஆகவே இளைஞர்களே, Testosterone, Estrogen கவர்ச்சியைக் காதல் என்று ஏமாற வேண்டாம். Procreative Energyஐ மடைமாற்றுங்கள். பல சாதனைகள் சாத்தியமாகும். பிறர் மீது தாயன்பு இருந்தால், நீங்கள் காதலிக்கிறீர்கள் என்று பொருள். தாயன்பில் நிகழ்வதெல்லாம் சரியானதாக இருக்கும்.

     - தியானம் குறித்து இப்போது பேசுவோம். தூக்கம் என்பது உடல் நிலையிலான தியானம். இது முக்கியம். அப்போது தான் உடல் - மன Repairing process நடக்கும். இரவு 10.30 மணி முதல் காலை 4.30 மணி வரை தூக்கம் அவசியம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனதை ஒருமுகப்படுத்தும் Meditation என்பது மன அளவிலான தியானம். மனம் குவிவதால், பல சாதனைகள் புரிய இது உதவும். ஆன்மாவின் தியானம் மிக மிக முக்கியம்: இது எண்ணமற்ற விழிப்புநிலை; மனமற்றுப் போதல்; மனம் இறக்கும் கலை. அப்போது அந்த மனமற்ற நிலையில் ஆன்மா - Inner Higher Self மட்டும் இருக்கும். நாமெல்லோருக்கும் உடல் வேறு வேறு. வளர்ந்த சூழ்நிலையால் மனம் வேறு வேறு. ஆனால், ஆன்மா எல்லோருக்கும் ஒன்றே. ஆன்மாவின் தியானத்தில் எல்லோரும் ஒன்றே என்பது அறிவுப் பூர்வமாக இல்லாமல் - அனுபவப் பூர்வமாகப் பிடிபட்டு விடும். பிரபஞ்ச சக்தியோடு ஒன்றுபடும். பிரபஞ்ச சக்தியும் தானும் வேறற்றதாகிவிடும். இது தனி Subject - புனிதப் புரிதல்.

     ஆனால், இவை எல்லாவற்றையும் வெறும் புறஅறிவால் மட்டும் தெரிந்து கொண்டு, interiorisation ஆகவில்லை என்றால், அதனால் பெரும் பயனொன்றும் இல்லை. அகப்பொறியியல் உத்திகளை இடைவிடாது பின்பற்றி வருவது தான் Interiorisationக்கான ஒரே வழி.

     துரியோதனன் கிருஷ்ணரிடம் கூறுகிறான்: "எனக்கு தர்மம் எதுவென்று தெரியும்; ஆனால் அதைப் பின்பற்ற முடியவில்லை. எனக்கு அதர்மம் எதுவென்றும் தெரிகிறது; ஆனால் அதிலிருந்து விலகவும் முடியவில்லை!" வெறும் அறிவால் மட்டும் அறிந்து, Interiorisation ஆகவில்லை என்றால், இது தான் விளைவு.

     உங்கள் Engineeringல் எந்த அளவுக்கு ஆராய்ச்சிகள் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு Inner Engineeringகிலும் அறிவியல் பூர்வமாகவும் அனுபவப் பூர்வமாகவும் முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது முக்கியம் என்ற வேண்டுகோளோடு நிறைவு செய்கிறேன்.

பொறுமையோடு கேட்டு அகத்தில் வாங்கிக்கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி பாராட்டி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.



1 comment:

  1. Greet Vivekanandan...

    Thank you Very much for sharing.

    ReplyDelete